நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Saturday, October 22, 2016

இயக்குநர்- இயக்குனர் எது சரி ? அறிவோம் தமிழ் இலக்கணம்:

இயக்குநர்- இயக்குனர் எது சரி ?

எப்பொழுது எழுதத் துவங்கினாலும் இப்படி இந்தச் சொல் வரும்பொழுது *ஓர் குழப்பம்* என்கிறார். ஓரளவிற்கு பிழையற எழுதக் கற்றவர்களும் கூட குழம்பும் இடமிது. ஆனால் இயக்குனரா? இல்லை இயக்குநரா? எது சரி என்று சொல்வதற்கு முன்னர் வேறொன்றையும் இங்கே சொல்லியே ஆக வேண்டும்.


*ஓர் குழப்பம்* என்று எழுதக்கூடாது. உயிரெழுத்திற்கு முன்பு தான் *ஓர்* என்று எழுதவேண்டும் மற்ற இடங்களில் ஒரு என்று தான் வரும். ஆக *ஓர் இரவு நேரத்தில்..* என்று எழுதலாம். ஆனால் அதுவே மாலைப் பொழுதைக் குறித்து எழுதுமிடத்து *ஒரு மாலைப் பொழுதில்..* என்று எழுதுவதே சரி.

அதுபோலவே உயிரெழுத்திற்கு முன்னர் *பேர்* என்றும் மற்ற இடங்களில் *பெரிய* என்றும் எழுத வேண்டும். இதனால் தான் பேராபத்து, பேரவை, பேரணி என்று எழுதுகிறோம் (பேர்+ஆபத்து, பேர்+அவை ,பேர்+அணி ). அதே நேரத்தில் புராணம் என்று வந்தால் அங்கே *பேர்புராணம் என்று எழுதுவது பிழை* என்பதால் *பெரியபுராணம்* என்றும் எழுதுகிறோம். பெரியகுளம், பேரரசன், பேரிடர், பேரிணக்கம், பேரியக்கம், பேருவகை என்றெல்லாம் எழுதுவதன் பின்னால் இருக்கும் உத்தி இதுவே.

இவ்வகையிலேயே முறையே உயிர் வந்தால் *ஈர்*,மற்ற இடங்களில் *இரு*. எ.கா-ஈருயிர், இருமுடி

சரி, இனி கேள்விக்கு வருவோம். *இயக்குநர்* என்பதே சரி.

வந்தனர், பாடினர், பேசினர், சென்றனர் என்ற இப்பதங்களில் வரும் *னர்* பன்மையைக் குறிக்கும். ஆனால் இயக்குநர் அப்படியல்ல. ஏவல் பொருளில் வரும் *வினைச்சொல்*லை *பெயர்ச்சொல்*லாக்குவதற்கு  *நர்* விகுதியைச் சேர்க்க வேண்டும். ஆக *இயக்கு+நர்* என்பதுதான் சரி. பெறுநர், ஓட்டுநர், ஆளுநர், மகிழ்நர், ஆக்குநர், வாழ்த்துநர் என்று இப்படி பற்பல சொற்களைச் சொல்லலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment