நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, March 29, 2012

குழந்தை பருவத்தின் பொய்கள்



'புத்தகத்து மயிலிறகு
குட்டி போடும்!
மழை பெய்யும்
திசை சொல்லும் விட்டில் பூச்சி!
வெள்ளை கொக்கு
கையில் மச்சம் போடும்!

எறும்பின் கண்களுக்கு
நாமெல்லாம் அரக்கர்கள்!
பழவிதையை தின்றால்
வயிற்றில் மரம் முளைக்கும்!
ரயிலேற்றிய
தண்டவாளக்காசு காந்தமாகும்!

பசுஞ்சாணத்தில்
இடி விழுந்தால் தங்கமாகும்!
இரவில் விசில் ஊதினால்
பாம்பு வரும்!
கடவுள் குளிப்பதால்தான்
மழைபெய்கிற‌து

பனிரெண்டு மணிக்கு
புளியமரத்தில் பேய் வரும்!
சுடுகாட்டு சாம்பல் பூசி
மண்டை ஓட்டுடன் வருவான்
நள்ளிரவு குடுகுடுப்பைகாரன்!

கொடிக்காய் பழவிதையை
பழுதின்றி உரித்து
ஜன்னலில் வைத்தால்
வீட்டிற்கு விருந்தாளி வருவார்கள்!
கோவில் சுவற்றில்
தேர்வுஎண் எழுதினால்
கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்!

திரைப்படத்தில் வாகனங்கள்
வேகமாக‌செல்லும் காட்சிகளுக்கு
படச்சுருளை வேகமாக‌சுற்றுவார்கள்!
விமான‌த்தில் செல்பவர்கள்
எல்லோரும் வெள்ளைகாரர்கள்!
இரண்டாயிரமாவது ஆண்டில்
உலகம் அழியும்! 'என‌

இப்போது நினைத்தாலும்
அழகாகவே இருக்கின்றன!

By Karthik Raja

மறக்கப் பட்ட வீதிகள் !



மண்ணும் புழிதியும் அமைதியாய்,
மரமும் மைதானமும் ஏக்கமாய் ,
பிஞ்சு கால்களும் நெற்றி வியர்வையும்,
தொட்டுப் போகாதப் பட்டுப் போன செடிகளும்!

பம்பரமும் கில்லியும் திரையோடு வருவதில்லை ,
வெயிலும் மழையும் வரவேற்பறையை நனைப்பதில்லை ,
பக்கத்து விட்டு பையன் பெயரும் தெரிவதில்லை ,
எங்கோ ஒரு கற்பனை நகரத்தில் ஒவ்வொரு
சந்திலும் ஓடிக்கொண்டு இருக்கிறான்!

பள்ளி விட்டு ஓடிவந்து அன்னை முகம்
கெஞ்சி விட்டு தெருவில் இறங்கி
நட்பின் கைகோர்த்து விளையாடி அளண்டு
உறங்கி போகும் சுகம் தருமா ? திரையில் விளையாட்டு !

ஏக்கம் தரும் ஆண்டு விடுமுறைகள் ,
எப்போதாவது வரும் திரைப்படங்கள்,
தினமும் எதிர்நோக்கும் மாலை நேர விளையாட்டுகள் ,
எல்லாம் தின்றிருக்கிறது வண்ணத்திரை !!!!

-வித்யா.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?



கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

-தமிழ்.

பாரதி வாழ்க்கை வரலாறு!



1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். தந்தை; சின்னச்சாமி அய்யர்; தாய்; லட்சுமி அம்மாள். இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர்; சுப்பையா.

1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.

1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.

1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.

1894 முதல் 1897 : திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்.

1897 : ஜூன். 14 1/2 வயது பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம்.
1898 : ஜூன்; தந்தை மரணம். பெருந்துயர், சஞ்சலம்.

1898 முதல் 1902 : காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம். படிப்பு அலகாபாத் ஸர்வ கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு. காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி பயின்றார். கச்சம், வால் விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.

1902 முதல் 1904 : எட்டயபுரம் வாசம். மன்னருக்குத் தோழர். விருப்பமில்லா வேலை. மதுரை விவேகபாநுவில் தனிமை இரக்கம் என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.

1904 : ஆகஸ்ட் - நவம்பர்; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.

1904 : நவம்பர்; சென்னை சுதேச மித்திரன் உதவியாசிரியர். ஜி. சுப்பிமணிய அய்யரிடம் சிட்சை. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு.

1905 : வங்கப் பிரிவினை. சமுக சீர்திருத்தவாதி பாரதி அரசியல் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஞான குருவாக ஏற்றல்.
1906 : ஏப்ரல்: சென்னையில் புரட்சிகரமான இந்தியா வாரப் பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் ந. திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி, சா. துரைசாமி அய்யர், வி. சக்கரைச்செட்டி, வ.உ.சி நட்பு. விபின சந்திரபாலர் சென்னை விஜயம். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிகை ஆரம்பம்.

1907 : டிசம்பர்; சூரத் காங்கிரஸ், திலகரின் தீவிரவாத கோஷ்டிக்கு ஆதரவு. வ.உ.சி., மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.

1907 : அரசியல் எதிரி, பழுத்த மிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார். சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.

1908 : சென்னை தீவிரவாதிகள் கோட்டை. சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது; வ.உ.சி., சிவாவுக்குத் தண்டனை, சிறை வாசம், வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார். 1908 : சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.

1908 முதல் 1910 : இந்தியாவும் புதுமை வந்து, பிரெஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் நுழையாதபடி, பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா நின்று போகிறது.

1909 : ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.

1910 : விஜயா தினசரி, சூர்யோதயம் வாரப் பதிப்பு, பாலபாரத ஆங்கில வாரப்பதிப்பு, கர்மயோகி மாதப் பதிப்பு - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.

1910 : ஏப்ரல் : பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.

1910 : நவம்பர் : கனவு என்ற ஸ்வயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.

1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை. புதுவைத் தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள்; புதுவையிலிருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.

1912 : உழைப்பு மிக்க வருடம். கீதை மொழி பெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரம்.

1913 முதல் 1914 : சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது. சுப்பிரமணிய சிவத்தின் ஞானபாநு பத்திரிகைக்கு விஷயதானம். தென் ஆப்பிரிக்கா நேடலில் மாதா மணிவாசகம் நூல் பிரசுரம். முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவைத் தேச பக்தர் தொல்லைகள் அதிகரித்தல்.

1917 : கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

1918 : நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப்பாட்டு என்று வெளியிடுகிறார்.

1918 : புதுவை வாசம் சலித்துப்போய், புதுவையை விட்டு நவம்பர் 20 ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில், வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச் செல்கிறார்.

1918 முதல் 1920 : கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம்; நடைபெறவில்லை.

1919 : மார்ச்; சென்னைக்கு விஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.

1920 : டிசம்பர் : சென்னையில் சுதேசமித்திரனில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.

1921 : ஜூலை - ஆகஸ்ட்; திருவல்லிக்கேணி கோயில் யானை ஒதுக்கித் தள்ள, யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார் கவிஞர்.

1921 : செப்டம்பர்; யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.

1921 : செப்டம்பர் 11; நோய்க்கடுமை. மருந்துண்ண மறுப்பு.

1921 : செப்டம்பர் 12; நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு மறைவு. வயது 39 நிறையவில்லை.


-தமிழர்- வரலாறு. 

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும்.


தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...

இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்

"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.

அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் "
என்று கூறினார்.

1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.

இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 ௦பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.
ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.

நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.

ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.
நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.

மலேயாவிலும் நேதாஜிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.


ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.
விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் ---- நேதாஜி.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...


-தமிழ் தாசன்

தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்


நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கின்றது இதயம்:
நிமிடத்திற்கு 5முதல் 5.5 லிட்டர் இரத்தம் இதயத்திற்கு வந்து செல்கிறது..

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இதயம் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது..

மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா?

விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம் மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது.

உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை.

வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லை யோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். அதற்கான வழிமுறைகள் என்ன என்று பார்ப்போம்..

ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்க ரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.

சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.

ஆரோக்கிய எடை:
உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.

அளவுகள்: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.
சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.

மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவு கிறது.

பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.

நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல்வது போன்றவை நல்லது.

நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.

பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகென்ன இவற்றையெல்லாம் கடைபிடித்தால் இதய நோய் உங்களிடம் வருமா என்ன?


-நன்றி -உதய் .

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்........
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்........
- Prasath Paul Poruse-with -Devamathi.

கல்வி


கல்வி என்பதை
எப்பாடுபட்டாவது முதலில் கற்று கொள்ளவேண்டும்.
பிறகு கல்வி கிடைக்காத ஏழைகளுக்கு அதை கற்பிக்க வேண்டும்.
கல்வி என்பது கருப்பு பணம் அல்ல. தேவைக்கு மேல் சேகரித்து பூட்டிவைக்க.
கல்வி என்பது தாய் கைப்பிடி சோறுப் போல
பசிப்பவருக்கு ஊட்டி கொடுக்க.

-- தமிழ்தாசன் --தேவமதி .

"ஓடி விளையாடு பாப்பா'-பாரதியாரின் "பாப்பா' யார் தெரியுமா?

ஓடி விளையாடு பாப்பா' என்றபாட்டை பாடியவர் யார் என்றால் "பாரதியார்' என்று பட்டென பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், அந்தப் பாட்டு பாரதியாரின் கற்பனையில் பிறக்க காரணமான "பாப்பா' யார் தெரியுமா? தொடருங்க!
பாரதியாரின் இரண்டாவது மகள் சகுந்தலா, ஒருநாள் அழுது கொண்டிருந்தாள். அவளை விசாரித்த போது, ""அம்மா திட்டினாள்,'' என்றாள். பாரதியார் தன் மனைவி செல்லம்மாளைக் கடிந்து கொண்டார்.
""குழந்தையை ஏன் திட்டுகிறாய்?'' என்றார்.
""உங்களுக்கென்ன! காலை முதல் மாலை வரை ஏதாவது எழுதுவதே உங்களுக்கு வேலையாகி விட்டது. நானல்லவா இவளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது! உங்கள் செல்லமகள் செய்யும் திருவிளையாடல்கள் உங்களுக்கெங்கே தெரியப் போகிறது! பக்கத்து வீடுகளுக்கு ஓடுகிறாள். அங்கே குழந்தைகளுடன் சண்டை வருகிறது. யாராவது அடித்து விட்டால் அடி வாங்கி வந்து இங்கே
உட்கார்ந்து அழுகிறாள். இவளைச் சமாதானம் செய்வதே எனக்கு பிழைப்பாகி விட்டது. "இனி வெளியே போகாதே, ஒழுங்காக வீட்டில் இரு' எனக் கண்டித்தேன். அதற்காக உட்கார்ந்து அழுகிறாள்,'' என்றார் சலிப்புடன்.
பாரதியார் சிரித்தபடியே மகளை அணைத்துக் கொண்டார்.
""சகுந்தலா! நான் உனக்கு ஒரு பாட்டு கற்றுத் தருகிறேன். அதைப் பாடிக்கொண்டே இரு, பொழுது பயனுள்ளதாகக் கழியும்,'' என்றார்.
அவரது வாயிலிருந்து பாப்பா பாட்டு மழையாய் பொழிந்தது.
""ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா'' என்று.
இப்படியாக, பாப்பா பாட்டு பிறக்க காரணமாக இருந்தது,நம் முண்டாசுக் கவிஞனின் செல்லத் திருமகள் தான்!
நன்றி..மலர்- திலகவதி .
 

Wednesday, March 28, 2012

குழந்தை வளர்ப்பு:சுயமதிப்புமிக்க குழந்தைகளாக வளர...


வளர்மதியின் தந்தை அவளது அரையாண்டுத் தேர்வின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ந்து போனார். அவளிடம் கோபப்படாமல் கரிசனத்தோடு கேட்டார்; நல்லாத்தானே படிச்சே, மதி; ஏன் இப்படி மார்க் குறைந்ஞ்சு போச்சு? தரையைப் பார்த்துக் கொண்டிருந்த மகள், நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் அவள் அழ ஆரம்பிக்கிறாள் என்று அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

மதி புத்திசாலி, நன்கு தயார் செய்திருந்தாள்; ஏன் மதிப்பெண் குறைந்தது? காரணத்தை அறிய அவரும் பல கேள்விகளைத் தொடுத்தார். ம்ஹூம்.. எந்தப் பதிலும் வரவில்லை. குனிந்த தலைநிமிராமல் பொல பொலவென்று கண்ணீர் விட்டுக் கொண்டு நிற்கும் மகளைப் பார்க்க அவருக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

கத்த ஆரம்பித்த அவரை, அமைதிப்படுத்த வளர்மதியின் தாய் குறுக்கிட வேண்டியிருந்தது. மகளை அப்புறப்படுத்தியபின் தாய், தந்தையிடம் சொன்னார். அவளே மார்க் குறைஞ்சிருக்கேன்னு வருத்தத்திலே இருக்கறப்போ, நீங்க வேறே கத்தி அவளை வருத்தப்பட வைக்கணுமா? சும்மா இரு, பிரச்னை எங்கேன்னு புரிய வேண்டாமா? போன தடவை 90 மார்க் இந்தத் தடவை 40 மார்க்... நீ அவளைப் பயந்தாங்கொள்ளி ஆக்கிட்டே சின்ன வயசிலே ஏதோ ஒண்ணு மாத்தி ஒண்ணு உடம்பு படுத்திக்கிட்டே இருந்ததாலே அவளை நீ ரொம்பப் பொத்திப் பொத்தி வளர்த்துட்டேன்னு தோணுது.... என்று அவர் பதில் சொல்ல, அவர்களுடைய விவாதம் தொடர்ந்து எங்கெங்கோ போக ஆரம்பித்தது.

வளர்மதிக்கு வயது 15 இப்போது ஏன் இந்த நிலைமை? எங்கே எது தவறாகிவிட்டது? காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு குழந்தையும் வளரும்போது தன்னைப் பற்றி ஒரு மதிப்பீட்டைத் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறாள். இதைத்தான் சுயமதிப்பு என்று சொல்கிறோம். சுயமதிப்பு சரியாக இருக்கும் குழந்தை தன்னம்பிக்கையுடன் செயல்படுவாள். அவசியம் இல்லாதவற்றுக்குப் பயப்படமாட்டாள்.

சுயமதிப்பு எப்படி உருவாகிறது?

குழந்தையின் முதல் வயதிலிருந்தே சுயமதிப்பு உருவாக ஆரம்பிக்கிறது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா? ஒரு குழந்தை தனக்குக் கிடைக்கும் பாராட்டுகள்; தான் அடையும் வெற்றிகள் இவற்றைப் பொருத்து, தன்னைப் பற்றிய கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறது. சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட முதல் முறை நடப்பது, நடக்க ஆரம்பிப்பது, போன்றவை குழந்தைக்கு வெற்றிதான். பெற்றவர்கள் பாராட்டும் பொழுது, நான் கெட்டிக்காரி என்கிற பெருமையை நாம் அவள் முகத்தில் காண்போம்! என்னால் முடியும், எனக்கு வரும் போன்ற எண்ணங்கள் வரவர, தன்னம்பிக்கை கூடும்.

வளர்மதியின் விஷயத்தில் பெற்றோர் சற்றே எச்சரிக்கையோடு நடப்பதாக எண்ணி, அவளது இளம்பிராயத்தில் தேவைக்கு மீறிய பாதுகாப்பை அளித்திருக்கலாம்.

குழந்தை வேகமாக ஓடினால் அதைப் பாராட்டுவதற்குப் பதில் ஓடாதே, விழுந்து விடுவாய் என்கிற விதத்தில் கொடுக்கும் பாதுகாப்பை இங்கு குறிப்பிடுகிறேன். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் உன்னால் முடியாது; நான் செய்து கொடுக்கிறேன், நீ ரொம்ப நேரம் ஆக்குவாய், நான் கிடுகிடு என்று முடித்து விடுவேன் என்று குழந்தைகளிடம் எதிர்மறையாகப் பேசுவதை நாம் பார்க்கிறோம். குழந்தைகள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. எனக்கு வராது என்று பெற்றோர் சொல்கிறார்கள் என்கிற சுதியில் குழந்தை முயற்சி செய்கையில் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.

வளர்மதிக்கு ஒருவேளை இளம் பிராயத்திலேயே எனக்கு வராது என்னால் முடியாது என்று என் பெற்றோர் நினைக்கிறார்கள் என்று தோன்ற ஆரம்பித்திருந்தால் அவளிடம் எதிலும் ஒரு தயக்கம் வந்திருக்கலாம். அதுவே அவள் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும். ஒவ்வொரு சிறு தோல்வியும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி ஒரு பயத்தை வரவழைத்திருக்கலாம். அவளே தனது மனநிலையைப் புரிந்து கொள்ளாதபோது, பெற்றோரிடம் எப்படித் தெரிவிப்பாள்? புரிந்து கொள்ளாத தந்தை அவளிடம் சத்தம் போட, அவள் இன்னும் மோசமாவாள்! அவளுக்குத் தேவை பெற்றோர் அவளுக்கு கொடுக்கும் உற்சாகமும், ஊக்குமும்தான்!

சில பெற்றோர் இப்படிக் குழந்தைகளை மேலும் இறக்கிவிடும் விதத்தில், அவளைப் பார்; இவளைப் பார் என்று பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவது குழந்தைகளுக்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

குழந்தைகள் எப்போதுமே பெற்றோரின் ஒப்புதலை பாராட்டை எதிர்பார்ப்பார்கள். மிகச் சிறிய விஷயங்களில் கூட வளர்ந்து சுதந்தரமாகச் செயல்படும் வரை பெற்றோர் அவர்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்வார்கள். இதை பெற்றோர் மறக்கக்கூடாது.

பாதிக்கப்பட்ட சுயமதிப்புடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபின் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அறிந்தால், சிறு வயது அனுபவங்கள் குழந்தைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று புரியும்.

* எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படமாட்டார்கள். பாதியில் பின்வாங்கிவிடுவார்கள்.

* பிறருடைய அறிவுரையை அவர்கள் தம்மைக் குற்றம் சொல்வதாகக் கொள்வார்கள்.

* வேறு யாரையாவது ஒருவர் பாராட்டினால் இவர்களுக்கு அறவே பிடிக்காது. என்ன, பெரிதாகச் சாதித்துவிட்டாள்? என்று குறையாக மதிப்பிடுவார்கள்.

* தன்னை எல்லோரும் பாராட்ட வேண்டும்; தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும்.

* நாலு பேருக்கு நடுவில் தன் கருத்தைச் சொல்ல தயங்குவார்கள். மற்றவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்கிற தயக்கம் வரும்.

* தன் தோல்விகளுக்குப் பிறரைக் காரணம் காட்டுவார்கள். வெற்றி கிடைத்தால் பெருமையாகப் பேசுவார்கள்.

வளர்மதியின் பெற்றோர் இப்படியே அவளை விட்டுவிட்டால் இந்த நிலைமைக்கு அவள் ஆளாகலாம். அவளை உற்சாகப்படுத்த அவர்கள் என்ன செய்ய வேண்டும்.

* குறைகூறுவதை அறவே நிறுத்த வேண்டும்.

* அவளிடம் உள்ள நல்ல திறமைகளை வளர்க்க வேண்டும்.

* சின்ன செயலானாலும் பாராட்ட வேண்டும். தவறு செய்திருந்தால் கூட அதையே மட்டம் தட்டிப் பேசாமல், இனி அந்தத் தவறு நடக்காதிருக்க என்ன செய்யலாம் என்று பேச வேண்டும்.

* உனக்குத் தன்னம்பிக்கை இல்லை சுயமதிப்பு குறைவு என்று நேரிடையாகப் போட்டு உடைக்ககக்கூடாது.

* மார்க் முக்கியமில்லை. உன் முயற்சிதான் முக்கியம். என்ன மார்க் வாங்கினாலும் எங்கள் மகள் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று அவளை நம்ப வைக்க வேண்டும். பெற்றோர்கள் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.


-தமிழ்ச் சமுதாயம்

மனித உடலைப் பற்றி அறிவோம் !



மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639

மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400

மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33

மனித மூளையின் எடை 1.4 கிலோ

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்

மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்

உடலின் மெல்லிய சருமம் கண் இமை

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது.

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது

எலும்புகள்

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

தோல்

உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை
நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.

ஈரல்

நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்..

நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

விரல் நகம்

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது

-தமிழ்ச் சமுதாயம்

Sunday, March 25, 2012

நர்சரி பள்ளியைவிட தாத்தா, பாட்டி பெஸ்ட் இங்கிலாந்து ஆய்வில் தகவல்

நர்சரி பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளைவிட தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைகளின் ஆற்றல் சிறப்பாக இருப்பதாக இங்கிலாந்து ஆய்வில் தெரியவந்துள்ளது.
5 வயது ஆன பிறகுதான் குழந்தை முதன்முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைக்கும். இந்த வழக்கம் மறைந்துவிட்டது. குக்கிராமத்தில்கூட நர்சரி பள்ளி வந்துவிட்டது. எல்கேஜி, யுகேஜிக்கு முன்பாக, மழலை மாறாத இரண்டரை வயதிலேயே ப்ரீகேஜிக்கு துரத்திவிடுகிறார்கள். இதுதொடர்பாக இங்கிலாந்தின் நஃபீல்டு அறக்கட்டளை மற்றும் பண புழக்கம் தொடர்பான ஆய்வு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தின. சமூக ஆராய்ச்சியாளர் கரோலின் பிரைசன் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாவது:

புதிதாக பள்ளி செல்லும்போது குழந்தைகளுக்கு ஒருவித தயக்கம், பயம் இருக்கும். நர்சரி சென்ற குழந்தைகளுக்கு இந்த பிரச்னைகள் இருக்காது. அதே நேரம், அதிக பணம் செலவழித்து சேர்க்கப்படும் நர்சரி பள்ளியில் கிடைப்பதைவிட நல்ல அனுபவம், பழக்க வழக்கங்கள் தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைக்கு கிடைக்கிறது. அந்த குழந்தைகள் புதிது புதிதாக நிறைய வார்த்தைகள் தெரிந்துகொள்கின்றன. சரளமாக பேசுகின்றன. கோபம், வருத்தம் என அவர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவது இல்லை. பள்ளியில் சேர்ப்பது என்ற குறுகிய நோக்கத்துடன் பார்க்காமல், குழந்தையின் எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் 5 வயதுக்கு முன்பு வரை தாத்தா, பாட்டியிடம் வளர்வதே நல்லது. அன்பு செலுத்தும் உறவினர்கள் மத்தியில் வளரும் குழந்தைகள் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்கின்றன.

அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் குழந்தையை வேறு வழியின்றி நர்சரியில் சேர்க்கின்றனர். சிலர் பிள்ளையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தங்களது பெற்றோரிடம் (தாத்தா, பாட்டி) விடுகின்றனர். நர்சரியில் பிள்ளையை சேர்க்க பணம் இல்லாதது மட்டுமே இதற்கு காரணம் அல்ல. தங்கள் பிள்ளையை தாத்தா, பாட்டி நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை முதல் காரணம். அவர்கள் நன்கு அன்பு செலுத்துவார்கள் என்பது அடுத்த காரணம்.2000ம் ஆண்டில் பிறந்த குழந்தைகளை வைத்து ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அவர்களில் நர்சரியில் படித்த குழந்தைகளைவிட தாத்தா, பாட்டியிடம் வளர்ந்த குழந்தைகள் சீக்கிரமே நன்கு பேசுகின்றன. நன்கு படித்த குடும்பங்களில் தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைகள் அடுத்தவர்களிடம் எளிதாக பழகுகின்றனர். எளிதில் உணர்ச்சிவசப்படாமல், எந்த பிரச்னையையும் நிதானமாக அணுகுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. 5 வயதை எட்டும் குழந்தையிடமே இந்த மாற்றங்கள் நன்கு தெரிகின்றன.

Thursday, March 22, 2012

இலக்கண வகை

1: எழுத்திலக்கணம்

1. முதல் எழுத்து:

உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள), மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் (க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்.வ்,ள்,ழ்,ற்,ன்) பிற எழுத்துக்கள் உருவாகக் காரணமாக இருப்பதால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. இவற்றில் வல்லினம், மெல்லினம், இடையினம் பற்றி விரிவாக பின்பு காணலாம்.

உயிர் எழுத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை
உயிர் குறில் - அ,இ,உ,எ,ஒ - 5
உயிர் நெடில் - ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள - 7

மெய்யெழுத்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை
வல்லினம் - க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லினம் - ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
இடையினம் - ய்,ர்,ல்.வ்,ழ்,ள்

2. சார்பெழுத்து - சார்பெழுத்து பகுதி 1

இப்பகுதியில் சார்பெழுத்துக்களில் முதல் இரண்டான உயிர் மெய்யெழுத்தையும்,ஆய்த எழுத்தை குறித்தும் இங்கு காணலாம்.

(அ) உயிர் மெய்யெழுத்து
க்+அ=க
க்+ஆ=கா
க்+ஈ=கீ

மேலே உள்ள எடுத்துக்காட்டில் "க்: எனும் மெய்யெழுத்தும் "அ" எனும் உயிரெழுத்தும் இணைந்து "க" என்னும் உயிர் மெய்யெழுத்து பிறக்கிறது.உயிரும் மெய்யும் சேர்ந்து ஒலிப்பதால் உயிர் மெய்யெழுத்தாகிறது.

இவ்வெழுத்து பிறப்பதற்கு மூலமாக உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இருப்பதினால் இது சார்பெழுத்தாகிறது. மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாகவும் இவ்வெழுத்துக்கள் ஒலிக்கப்படினும், உயிரின் மாத்திரை அளவே ஒலிக்கப்படுவதால் இவை மெய் உயிர் என வழங்கப்படாமல் உயிர்மெய் என வழங்கப்படுகிறது.இது இரு வகைப்படும். அவை

(1) உயிர்மெய்க் குறில்

மெய்யெழுத்துக்களோடு உயிர்க்குறில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய்க் குறில் எனப்படுகின்றன. மொத்தம் (18 மெய் X 5 உயிர் குறில்கள்) 90 உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள்.

உதாரணம் க்+அ=க, க்+இ=கி, க்+உ=கு

(2) உயிர்மெய் நெடில்

மெய்யெழுத்துக்களோடு உயிர்நெடில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் நெடில் எனப்படுகின்றன. மொத்தம் (18 மெய் X 7 உயிர் நெடில்கள்) 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்கள்.

உதாரணம்: க்+ஆ=கா

(ஆ) ஆய்த எழுத்து

"அஃது, எஃகு"

மெலே உள்ள சொற்களில் காணப்படும் மூன்று புள்ளிகளுடைய எழுத்தை நாம் ஆய்த எழுத்து என்கிறோம். 3 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் இது முப்பாற்புள்ளி, முப்புள்ளி எனவும் வழங்கப்படுகிறது. ஆய்த எழுத்து ஒரு வார்த்தையில் இடம் பெறும் போது தனக்கு முன் ஒரு குற்றெழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்தையும் பெற்று நடுவில்தான் வரும். இவ்வாறு தனித்து வரும் ஆற்றல் இல்லாததினால் இது சார்பெழுத்தாயிற்று.

"நாபிறழ் மற்றும் நாநெகிழ் பயிற்சி"

பல்-பள்ளம்-பழம்

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று. அது மட்டுமல்லாமல் ண,ற, ள என்னும் எழுத்துகளும் தமிழின் தனிச் சிறப்புகளாம். பொதுவாக ழ, ல மற்றும் ள என்னும் மூன்று எழுத்துகளும் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாவுகளில் ஒரே எழுத்தாகிவிட்டன. இனத்திலும், சாதியிலும், மததிலும், நிறத்திலும், பணத்திலும் வேற்றுமைகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பவன் உச்சரிப்பில் மட்டும் ஒற்றுமையைப் பேணுகிறான். இனத்தில் வேறுபாடு இருந்தால் போதாதா, எழுத்தில் வேறு வேண்டுமா என நினைக்கிறானோ என்னவோ?

வெள்ளம் என்று சொல்வதைக் கேட்டு எழுதும் போது எந்த 'ல' என்று கேட்கிறான்.

தமிழில் ஒரே 'ள' தான் இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாக ஒலித்துக்காட்டினாலும் 'ள' என்று ஒலி வேறுபாடுறக் கூறப்படுவதை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை. ல, ள மற்றும் ழ இடையிலான ஒலி வேறுபாடு அவனுக்குப் புரியமாட்டேனென்கிறது.
எளிமையான ஒரு பயிற்சியை இங்கு கற்றுத்தருகிறேன். ல,ள,ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இது உதவும்.

'ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)

'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)

'ழ்' என்னும் எழுத்த்க்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்.

பல்-பள்ளம்-பழம்..... இது ஓர் எளிமையான பயிற்சி! இப்பயிற்சிகளை ஒரு பயிலரங்கில் கற்றுக் கொடுக்கும்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவியொருத்தி (சங்கீதா என்று நினைவு) கேட்டாள்:
"பல் என்று சொல்லும்போது நாக்கு பல்லில் பட வேண்டும் என்கிறீர்கள்! அப்படியானால் 'கல்' என்று சொல்லும்போது நாக்கு கல்லில் படவேண்டுமா?" நம் குழந்தைகளின் புத்திகூர்மையும் நகைச்சுவையும் சமயோஜிதமும் வியக்க வைக்கின்றன. இது போன்ற பல சொற்களையும், தொடர்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்க்கவும். உதாரணத்திற்குச் சில:

--- கல், நில், மலை, கலை, கள், வெள்ளை, மக்கள், விழை, வாழ்க்கை, ஆழி
--- வாழைப்பழத்தோல் வழுக்கி ஏழைக்கிழவன் கீழே விழுந்தான்
--- அவன் நல்லவன் அல்லன்
--- கல்லிலிருந்து எடுத்தான்
--- சொல்லொன்று சொல்லேன்
--- தள்ளும் உள்ளம்
--- தள்ளாடித் தள்ளாடிச் சென்றான்
--- பள்ளத்தில் உள்ள முள்ளெடு
--- கீழே விழுந்து அழுதான்
--- கொழுகொழுத்த வாழை

மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு "நாநெகிழ் பயிற்சி" என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு "நாபிறழ் பயிற்சி" என்று பெயர்.

உதாரணங்கள்:

--- தொழிலாளி
--- மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
--- பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது

நெற்றிக்குப் பொட்டிட்டு, விழிகளில் மையிட்டு, முகத்தில் நறுமணத் தைலமும் பொடியும் பூசி, இமைகளில், உதட்டில், கன்னங்களில், கூந்தலில், நகங்களில் வன்ணமிட்டு, கழுத்து, காது, மணிக்கட்டில் பொன், வெள்ளி அணிகள் பூட்டி, நகங்களை சீராக்கி, தலைமுடி நறுக்கி, கண்கவர் ஆடைகளையும் , கண்கண்ணாடிகளையும் குளிர்சாதன விற்பனையகங்களில் ஐந்துமணிநேரம் பொறுக்கிக் கழித்து எடுத்துத் தள்ளி, சோர்ந்து தேர்ந்து வாங்கி அணியும் நாம் மிகுந்த அழகுணர்ச்சியும் ரசனையும் கொண்டவர்கள் தான். ஆனால் வாயிலிருந்து வெளிப்படும் மொழியும் அதே போல அழகுடன் இருப்பதன் சுகத்தையும், சுவையையும் உண்ர்ந்தால்தான் நமது அழகுணர்ச்சியும் ரசனையும் முழுமை பெறும். இத்தனை அலங்காரங்கள் செய்து கொண்டு, வாயைத் திறக்கும் போது, 'கலீஜாக' ல, ள, ழ மூன்றையும் ஒன்று குழப்பி அடிப்பது AWKWARD -இலும் BACKWARD ஆகத் தெரிகிறது எனக்கு. நாவு எனக்குத் திரும்ப மாட்டெனென்கிறது என்பதில் என்ன பெரிய பெருமை வந்துவிடுகிறதோ தெரியவில்லை.

"எனக்கு கடுமையான உள்மூலம் இருக்குங்க"
"எனக்கு நாலு நாளா சரியா டூபாத்ரூம் வர மாட்டேங்குதுங்க"
"வேகமா நடந்தா முட்டி வலிக்குதுங்க"

என்று சொல்லும்போது நம்மிடத்தில் தோன்றாத பெருமை "தமிழ்" பேசும் போது "எனக்கு நாக்கு புரள மாட்டேங்குது" என்று சொல்லும்போது எங்கிருந்துதான் வந்து சேர்கிறது?

அதானால்தான் :"யாகாவாராயினும் நாகாக்க "என்றாரோ வள்ளுவர்.

"பள்ளியில் பேசினால் ஃபைனென்றும் செய்தித்தாள்
அள்ளினால் சந்திப் பிழைகளும்-கொல்லுமச்
சேனல் யுவதிகளால் செத்தும் செம்மொழி
ஆனது இன்பத் தமில்"

படித்ததில் பிடித்தது: நன்றி! செழுங்காரிகை

தமிழ் பெயர்ப்பலகைப் பெயர்கள்

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வணிக, வியாபார மையங்கள், நேரடி ஒலிபெயர்ப்பு செய்து பெயர் பலகை வைக்கின்றனர்.
(எ.கா) Tailor - டைலர்.

அவர்களுக்கு இந்த பகுதி பயன்படும் வகையில் இந்த தகவலை கொண்டு சேர்த்தால் நன்று..

(1) Traders - வணிக மையம்
(2) Corporation - நிறுவனம்
(3) Agency - முகவாண்மை
(4) Center - மையம், நிலையம்
(5) Emporium - விற்பனையகம்
(6) Stores - பண்டகசாலை
(7) Shop - கடை, அங்காடி
(8) & Co - குழுமம்
(9) Showroom - காட்சியகம், எழிலங்காடி
(10) General Stores - பல்பொருள் அங்காடி
(11) Travel Agency - சுற்றுலா முகவாண்மையகம்
(12) Travels - போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம்
(13) Electricals - மின்பொருள் அங்காடி
(14) Repairing Centre - சீர்செய் நிலையம்
(15) Work Shop - பட்டறை, பணிமனை
(16) Jewellers - நகை மாளிகை, நகையகம்
(17) Timbers - மரக்கடை
(18) Priniters - அச்சகம்
(19) Power Printers - மின் அச்சகம்
(20) Offset Printers - மறுதோன்றி அச்சகம்
(21) Lithos - வண்ண அச்சகம்
(22) Cool Drinks - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
(23) Sweet Stall - இனிப்பகம்
(24) Cofee Bar - குளம்பிக் கடை
(25) Hotel - உணவகம்

(26) Tailors - தையலகம்
(27) Textiles - துணியகம்
(28) Readymades - ஆயத்த ஆடையகம்
(29) Cinema Theatre - திரையகம்
(30) Video Centre - ஒளிநாடா மையம், விற்பனையகம்
(31) Photo Studio - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
(32) Chit Fund - நிதியகம்
(33) Bank - வைப்பகம்
(34) Laundry - வெளுப்பகம்
(35) Dry Cleaners - உலர் வெளுப்பகம்
(36) Agro Centre - வேளாண் நடுவம்
(37) Agro Service - உழவுப் பணி
(38) Air Conditioner - குளிர் பதனி, சீர்வளி
(39) Arts - கலையகம், கலைக்கூடம்
(40) Asbestos - கல்நார்
(41) Audio Centre - ஒலியகம், ஒலிநாடா மையம்
(42) Auto - தானி
(43) Automobiles - தானியங்கிகள், தானியங்கியகம்
(44) Auto Service - தானிப் பணியகம்
(45) Bakery - அடுமனை
(46) Battery Service - மின்கலப் பணியகம்
(47) Bazaar - கடைத்தெரு, அங்காடி
(48) Beauty Parlor - அழகு நிலையம், எழில் புனையகம்
(49) Beda Stall - மடி வெற்றிலைக் கடை
(50) Benefit Fund - நலநிதி

(51) Boarding Lodging - உண்டுறை விடுதி
(52) Boiler - கொதிகலன்
(53) Builders - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
(54) Cable - கம்பிவடம், வடம்
(55) Cabs - வாடகை வண்டி
(56) Café - அருந்தகம், உணவகம்
(57) Cane Works - பிரம்புப் பணியகம்
(58) Canteen - சிற்றுண்டி சாலை
(59) Cement - பைஞ்சுதை
(60) Chemicals - வேதிப்பொருட்கள்
(61) Chit Fund - சீட்டு நிதி
(62) Club - மன்றம், கழகம், உணவகம், விடுதி
(63) Clinic - மருத்துவ விடுதி
(64) Coffee House - குளம்பியகம்
(65) Color Lab - வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம்
(66) Company - குழுமம், நிறுவனம்
(67) Complex - வளாகம்
(68) Computer Centre - கணிப்பொறி நடுவம்
(69) Concreate Works - திண்காரைப்பணி
(70) Corporation - கூட்டு நிறுவனம்
(71) Courier - தூதஞ்சல்
(72) Cutpiece Centre - வெட்டுத் துணியகம்
(73) Cycle - மிதிவண்டி
(74) Depot - கிடங்கு, பணிமனை
(75) Dress Maker - ஆடை ஆக்குநர் (உற்பத்தியாளர்)

(76) Dry Cleaners - உலர் சலவையகம்
(77) Electicals - மின்பொருளகம்
(78) Electonics - மின்னணுப் பொருளகம்
(79) Emporium - விற்பனையகம்
(80) Enterprises - முனைவகம்
(81) Cycle Stores - மிதிவண்டியகம்
(82) Factory - தொழிலகம்
(83) Fancy Stores - புதுமைப் பொருளகம்
(84) Fast Food - துரித உணவகம், விரை உணா
(85) Fax - தொலை எழுதி
(86) Finance - நிதியகம்
(87) Furniture Mart - அறைகலன் அங்காடி
(88) Garments - உடைவகை
(89) Hair Dresser - முடி திருத்துபவர்
(90) Hardwares - வன்பொருளகம், வன்சரக்கு, இரும்புக்கடை
(91) Jewellery - நகை மாளிகை
(92) Litho Press - வண்ண அச்சகம்
(93) Lodge - தங்குமனை, தங்கும் விடுதி
(94) Market - சந்தை, அங்காடி
(95) Nursing Home - நலம் பேணகம்
(96) Pager - விளிப்பான், அகவி
(97) Paints - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
(98) Paper Stores - தாள்வகைப் பொருளகம்
(99) Passport - கடவுச்சீட்டு
(100) Parcel Service - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
(101) Petrol - கன்னெய், எரிநெய்
(102) Pharmacy - மருந்தகம்
(103) Photo Studio - ஒளிபட நிலையம்
(104) Plastic Industries - நெகிலி தொழிலகம்
(105) Plumber - குழாய்ப் பணியாளர்
(106) Plywoords - ஒட்டுப்பலகை
(107) Poly Clinic - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
(108) Powerloom - விசைத்தறி
(109) Powerpress - மின் அச்சகம்
(110) Press, Printers - அச்சகம், அச்சுக்கலையகம்
(111) Restaurant - தாவளம், உணவகம்
(112) Rubber - தொய்வை
(113) Sales Centre - விற்பனை நிலையம்
(114) Shopping Complex - வணிக வளாகம்
(115) Showroom - காட்சிக்கூடம்
(116) Silk House - பட்டு மாளிகை
(117) Soda Factory - வளிரூர்த்தொழில், காலகம்
(118) Stationery - மளிகை, எழுதுபொருள்
(119) Trade - வணிகம்
(120) Traders - வணிகர்
(121) Trading Corporation - வணிகக் கூட்டிணையம்
(122) Travels - பயண ஏற்பாட்டாளர்
(123) Tea Stall - தேனீரகம்
(124) Video - வாரொளியம், காணொளி
(125) Work Shop - பட்டறை, பயிலரங்கு
(126) Xerox - படிபெருக்கி, நகலகம்
(127) X Ray - ஊடுகதிர்

 
நன்றி - தமிழறிவோம்..
…