நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

"ரத்தவெள்ளத்தில் ஆசிரியை பிணமும், கொலைகாரனாக ஒரு குருத்தும்!"

நாம் வாழும் புற சூழல்தான், கருத்து,சிந்தனை,பண்பாடு-கலாட்ச்சாரம் இவைகளின் உருவாக்க களம்.இது பல கட்டங்களாக மாறியும்,வளர்ந்துகொண்டுமே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் அல்லவை நீடித்தும் அல்லாதவை கழிந்துமே இந்த வளர்ச்சி இருந்துகொண்டு இருக்கிறது.அது தானாக நிகழ்வதில்லை என்பதும் மனிதன் அதன் மீது தனது இயக்கு சக்தியை செலுத்துகிறான் என்பதும் உண்மை.
இன்று நாம் வாழும் சூழல்,உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் என்கிற உற்பத்தி-பரிவர்த்தனையை நோக்கிய ஒருங்கிணைந்த உலகமாக மாற்றும் முயற்சின் காலம் இது.இந்த முயற்சியில் பொருளாதார தாக்குதல்களை சந்திக்கிறோம்,அரசியல்தரம் மேலும்-மிகமேலும் சீரழிந்து நம்மீது ஏறி மிதிப்பதை சந்திக்கிறோம்,நமது போற்றுதலுக்கு உரிய கூட்டுக்குடும்ப உறவுகள் கொஞ்சம்-கொஞ்சமாக குறைந்து வருவதை சந்திக்கிறோம், முழுமையாக திறந்துவிடப்பட்ட கதவுகளின் வழியே மேற்கத்திய நுகர்வு கலாச்சாரமும், நாம் உள்வாங்க முடியாத (ஒவ்வாமை ஏற்படுத்துகிற) பண்பாட்டு தாக்குதல்களை சந்திக்கிறோம்,
இவைகள் அனைத்தும் நடுத்தர வர்க்க பகுதியினர்-கருத்தால்-கரத்தால் உழைக்கும் பகுதியினரை நாளைய நிலை என்ன என்று கானல் நீரை நோக்கி ஓடும் மான்களைப்போல் ஒட்டவைத்துக்கொண்டு இருக்கிறது.இவைகளின் மன அழுத்தம், ஆன்மீக-லௌகீக-வணிக-மற்றும் கல்வி,சுகாதாரம்,தொழில் உற்பத்தி உறவுகள் அனைத்திலும் மோசடியாளர்கள்-சமூகவிரோதிகள் இவர்களிடம் தஞ்சம்புக வைக்கிறது. தரம்தாழ்ந்த-மோசடி அரசியல்வாதிகள்,லஞ்சத்திற்கும்,ஊழலுக்கும் வழிகாட்டும் அதிகார வர்க்கத்தினர்,சாமியார்கள் பிழைக்க தெரிந்தவர்கள் என்றும்,நேர்மையான அரசியல்வாதிகளும்,அதிகாரவர்க்க பகுதியினரும் பிழைக்கத்தெரியாதவர்கள் என்று அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகின்றனர்.நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் அரசியலை - அது சாக்கடை என்று மக்களை ஒதுங்க செய்கிறது.
இவை அனைத்தும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும்,அனைத்தையும் லாபம் கொழிக்கும் தொழிலாக பாவிப்போரிடமிருந்து ஊழியர்களுக்கும் மன அழுத்தங்களாக ஏறி அமுக்குகிறது.வன்முறை-அடிதடி-ஒருதனி மனிதன் 100 பேரை ரத்தம் காக்க அடித்து சாகாடிப்பது,கொலைவெறி பாடல்களும்,குத்துப்பாடல்களும் கொண்டாட்டம் போடுவது இவைகளும்,பெண்ணுக்கு பணம் கொடுத்து பரிசம் போடுதல் என்பது மாறி வரதட்சணைகள் என்று திருமணங்களையும் வியாபாரமாக்கி இருப்பது, பெண்களை சிசுவிலேயே கொலை செய்வது இதுபோன்ற சமூக சீர்கேடுகள் அதிகரித்து தொடர்வாது இவை அனித்தும் இன்னும் பலவும் நாம் வாழும் சமூக சூழல். இவைகளுக்கு மிகப்பெரும் பங்குதான் ஒரு தளிரை கொலைகாரன் ஆக்கிஇருக்கிறது.தாய்க்கு ஈடான ஒரு ஆசிரியை கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்.
நமது வெறுப்பும்,கோபமும் இந்த சீரழிந்த சமூகம்-வியாபாரமாக்கப்பட்ட கல்விமுறை இவற்ற்றை மாற்ற வேண்டும் என்ற உந்து சக்தியாக இருக்குமானால், அதுவே அந்த தளிருக்கு நாம் கட்டும் பரிவும், தாயாகிய அந்த ஆசிரியைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கமுடியும்..

0 கருத்துரைகள்:

Post a Comment