நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, February 22, 2012

மாணவர்களிடம் குறையும் கல்வித் திறன்...

மாணவர்களிடம் குறையும் கல்வித் திறன்...

இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைதான் உயர்கிறது. ஆனால் அவர்களது கல்வித் திறன் குறைந்து கொண்டே வருவதாகக் கூறும் ஆய்வை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.

6 முதல் 14 வயது உடைய மாணவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதிலும், கணிதத்திலும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது, தனியார் டியூஷன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவும் குறைந்துள்ளது என்கிறது அந்த ஆய்வு.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கல்வித்திறன் குறித்து ஆய்வு நடத்தி கல்வித்திறன் அறியும் ஆண்டறிக்கை (ஏஎஸ்இஆர்) சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2011ம் ஆண்டு இந்தியாவில் கல்வித் திறன் எவ்வாறு இருந்தது என்பது குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார். அதில், துவக்கப் பள்ளிகளிலேயே கணினியை பயன்படுத்தும் முறை உயர்ந்துள்ளது. இந்தியாவில் 30% துவக்கப் பள்ளிகளில் கணினிப் பாடம் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் இது அதிகமாக (78.4%) உள்ளது. தமிழகத்தில் 51% அளவிற்குத்தான் கணினி பயன்பாடு உள்ளது. அதிலும் 7% அரசு பள்ளிகளில் மட்டுமே கணினி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, கடந்த ஆண்டைக் காட்டிலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக மாணவிகளின் விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் (89.7%), இந்த ஆண்டில் (94.8%) உயர்ந்துள்ளது. அதிக மாணவிகள் சேர்க்கை உள்ள மாநிலங்களாக பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகியவை முன்னிலையில் உள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதாகும். அதாவது, 2006ம் ஆண்டில் 18.7% இருந்த எண்ணிக்கை தற்போது 25.6% உள்ளது. கேரளா, மணிப்பூர் மாநிலங்களில் 60% மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர்.

இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவும் 73.4% இருந்து 70.9% குறைந்துள்ளது. அதே சமயம், ஆசிரியர்களின் வருகைப் பதிவு 87% சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனியார், அரசு பள்ளிகள் என எந்த வித்தியாசமும் இன்றி டியூஷன் வகுப்புகள் அதிகரித்துள்ளன. 20% முதல் 25% மாணவர்கள் தனியாக பணம் செலுத்தி டியூஷன் வகுப்பில் சேர்கின்றனர். ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், கேரளாவில் டியூஷன் வகுப்புகள் அதிகமாக நடக்கின்றன.

இறுதியாக, கவலைக்குரிய அந்த தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, குழந்தைகளின் கற்கும் திறன் குறைந்து வருகிறதாம். அதாவது 2010ம் ஆண்டில் எடுத்த ஆய்வில் 5வது படிக்கும் ஒரு மாணவரால் 2ம் வகுப்பு புத்தகத்தை படிக்கும் திறன் 53.7% இருந்தது. இந்த திறன் தற்போது 48.2% குறைந்துள்ளது. விதிவிலக்காக குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் கல்வித் திறன் உயர்ந்துள்ளது சற்று நிம்மதியை அளிக்கிறது.

14 வயதுள்ள குழந்தைகளுக்கு கணிதக் குறியீடுகள் மிகக் கடினமாக இருப்பதும், 3ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், பக்கத்து எண்ணில் இருந்து கடன் பெற்று கழிக்கும் கணிதத்தை போடும் திறன் குறைந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே கணிதத்தை 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்யும் திறனும் 70.9% இருந்து 61% குறைந்துள்ளது. இதிலும், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மாணவர்களின் கணிதத் திறன் உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கல்வித் தரத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கற்கும் திறனை ஊக்குவிக்கும் விதத்தில் பாடப்புத்தகங்களும், ஆசிரியர்களும், வகுப்பறைகளும் மாற வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment