நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Tuesday, February 28, 2012

மாணவனின் குரூரம்...கொலை செய்யப்பட்ட ஆசிரியை...! ஒரு அலசல்...!


பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில

* சினிமா , டிவி தான் காரணம்\

* பெற்றோர்களே காரணம்.

*கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?!

* ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை.

இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!!

மாணவனை குறித்த ஒரு பார்வை

ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி தனது ஆத்திரம் தீரும் வரை குத்தியிருப்பான். சிறு அடியோ ரத்தமோ பார்த்தால் மனம் பதறகூடிய வயதில் ஆசிரியையின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்து வந்ததை பார்த்தும், அவர்கள் அலறி துடித்ததை கண்டும் சிறிதும் தயக்கமோ பயமோ இன்றி தொடர்ந்து குத்திக்கொண்டு இருந்திருக்கிறான். நிச்சயமாக ஒரு நாளில் ஏற்பட்டதாக இருந்திருக்க முடியாது. பல நாட்களாக மனதிற்குள் சிந்தித்து இருக்கிறான், இரண்டு நாட்களாக கத்தியுடன் வகுப்பிற்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பம் கிடைத்ததும் முடித்துவிட்டான்.ஒருவகையில்  திட்டமிட்ட கொலை !!

சினிமாவே காரணம்

கொலை செய்ய காரணம் தான் அடிக்கடிப் பார்க்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த தமிழ், ஆங்கிலப் படங்கள் காரணம் அதிலும் 'அக்கினிபத்' படத்தில் ஹீரோ வில்லனை கத்தியால் நெற்றியில் குத்தும் காட்சி தனது நெஞ்சில் ஆழமாக பதிவானது எனவும் கூறியிருக்கிறான்.

இவன் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனது ஆத்திரத்தை கோபத்தை எவ்வாறு தீர்த்து கொள்ளலாம் என சினிமா வழி காட்டி இருக்கிறது அவ்வளவு தான். ஆனால் இதை வைத்தே சினிமாதான் கொலைக்கே காரணம் என்பது சரியா?!

சினிமா காரணம் என்பதும் அந்த கத்தியை தயாரித்தவன் தான் கொலைக்கு காரணம் என்பதும் ஒன்றுதான். அந்த சினிமாவால் பாதிப்பு என்றால் படம்  பார்த்த அனைவருமே கொலையாளிகளாக மாறியிருப்பார்களே ?! காந்தி படம் பார்த்த அனைவரும் மகாத்மாவாக மாறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?! ஆனால் மனம் என்பதன் இயல்பே எதிர்மறைதான். எதிர்மறை எங்கு இருப்பினும் அதைக்கவனிக்கும். உள்வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால் ஆக்கபூர்வமானதை புறந்தள்ளும் என்ற நிதர்சனமான உண்மையினை கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆசிரியை என்றில்லை இவனது கோபத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் எடுப்பான். சொல்லபோனால் இவனை கிண்டல் செய்த சக மாணவர்களும் இதற்கு இலக்காயிருக்கலாம். நல்லவேளை இவனிடம் கத்திக்கு பதில் துப்பாக்கி இல்லை

ஆசிரியை கண்டிப்பது தவறு

ஒரு சாராரின் கருத்து என்னவென்றால் அந்த ஆசிரியையின் அதீத கண்டிப்பு ! தன் மாணவர்களின் படிப்பின் மீது எவ்வளவு அக்கறை இருந்தால் பாடத்தில் வீக்காக இருக்கும் ஏழு பேரை தனியாக வரச்சொல்லி வகுப்பு எடுத்திருப்பார். சரியாக படிக்கவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்று ஆசிரியர்கள் சொல்வது சகஜம். அப்படி சொன்னாலாவது அக்கறைகொண்டு படிப்பான் என்ற விதத்தில் தான்.

ஒருமாணவன் படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்ற இயல்பான அக்கறையில் கொடுக்கப்படும் கண்டிப்பை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ?

இந்த சம்பவத்தால் நம் ஆசிரியர்களின் மனம் பாதிக்கபடக் கூடும்.  யார் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன பாடத்தை நடத்துவதுடன் எங்கள் வேலை முடிந்தது என நம் ஆசிரியர்கள் யோசிக்க தொடங்கிவிடுவார்களோ என அஞ்சுகிறேன். அப்படி யோசிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகள் கூட அவர்களின் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலால் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அப்படி இருக்கும் போது மாணவன் செய்யும் தவறுக்கு /குற்றங்களுக்கு ஆசிரியர்களையும், பள்ளிகளையும் குறை சொல்லி கொண்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களை பற்றியும் மக்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை.

பள்ளிகள் என்னதான் செய்யும் ?

வகுப்பில் ஒரு பீரியட் நேரத்தில் பாடத்தை நடத்தவும், கேள்விகள் கேட்டு சந்தேகங்கள் தெளிவு படுத்தவும் நேரம் சரியாக இருக்கும். இதில் வகுப்பில் இருக்கும் 40,50 மாணவர்களை ஒவ்வொருவராக ஆயுதங்கள் வைத்திருக்கின்றனரா என உற்று கவனிப்பது முடிகிற காரியமா?

குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளையின் நடவடிக்கையை கவனிக்க முடியாத பெற்றோர்கள் தான் இத்தகைய வினாவை எழுப்புகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் ஆச்சர்யம் !?

 ஒரு மாணவனின் பெற்றோரின் குணாதிசியங்கள், வளரும் விதம், சுற்றுப் புறச்சூழல்கள், மரபு, புறவிசை தாக்கம் இன்னும் பிற. இவ்வளவும் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் விதைப்பவை பலமுள்ளதாக மாறும். இவைகளில் ஏதாவது முரண்பாடுகள், கோளாறுகள் இருப்பின் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் நல்லதை போதித்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான். பள்ளிகளை குறை கூறுபவர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இன்றைய கல்வி

கல்வி முறையில் இருக்கும் பல குளறுபாடுகள் நம் மாணவர்களை மிகுந்த சோர்வடைய செய்கிறது...10 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படும் பாடுகள் சொல்லி முடியாது...அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை பிப்ரவரிக்கு முன்பே முடித்து தேர்வு வைத்து விட்டு பத்தாம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...கோடைவிடுமுறை கிடையாது. எதற்கு இத்தகைய போராட்டம்...?! புத்தகத்தை மட்டும் மனபாடம் செய்து அப்படியே வெளிக்கொணரும் கல்வி முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஒரு இறுக்கமான சூழல் மாணவர்களிடையே நிலவுகிறது, சுதந்திரமாக படிக்கும் வாய்ப்பு கொடுக்க படவேண்டும்...அதிகரிக்கும் மாணவர்களின் மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை பற்றி அரசு கல்வித்துறை அக்கறை கொள்ளவேண்டும்.

இன்றைய பெற்றோர்கள்

நேற்றைய குழந்தைகள் நாம் என்பதை மறந்து விடுகிறோம்...தான் கற்காத கல்வியை தனது பிள்ளை கற்க வேண்டும் என்பதில் முடிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதிர்காலம்.

எதிலும் தனது குழந்தை முதன்மையாக வர வேண்டும் என ஆசை படுவதில்  தவறில்லை, அதற்காக பெரும் சுமையை வைப்பதுபோல் எப்போது படி...படி என வற்புறுத்தி கொண்டே இருப்பது மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்து விட்டாலும், வாழ்க்கையே தொலைந்து விட்டது என்று பெற்றோர் கொள்ளும் பதற்றம் அப்படியே அவர்களது பிள்ளைகளையும் தொற்றிக்கொள்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீட்டில் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை ஆடவும் செய்யணும், பாடவும் செய்யணும், படிக்கவும் செய்யணும், விளையாட்டிலும் இசையிலும் தேர்ச்சி பெறணும் என்பதெல்லாம் மிக அதிகபடியான எதிர்பார்ப்புகள்.

இங்கே சம்பந்தப்பட்ட மாணவன், மூன்று பெண்பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே ஆண் , நம் சமூகத்து வழக்கப்படி(?) ஒட்டு மொத்த குடும்பமே போட்டி போட்டு செல்லம் கொடுத்திருக்கிறது...தனி அறை, டிவி, கம்பியூட்டர், செலவுக்கு பணம் இப்படி வளர்க்கப்பட்டவனுக்கு , பள்ளியில் ஆசிரியையின் கண்டிப்பு வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லையே ?!!

குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத பெற்றோர்கள் தங்களது குற்றத்தை மறைக்க குழந்தைகள் கேட்டதை உடனே  வாங்கிகொடுத்து பழக்கி  விடுகிறார்கள்...வெளி உலகத்தில் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றபோது எதிர்க்க தொடங்குகிறார்கள்...!

இன்றைய குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் உடனே சுட்டி காட்டபடுவது சினிமா டிவியை தான்...! இந்த சினிமா, டிவியை குழந்தைகளிடம் முதலில் அறிமுகம் செய்வது யார் ? இவை இரண்டும் சரியான வழியை காட்டவில்லை என்றால் அவற்றை ஏன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கிறீர்கள்...?! வீட்டில் இருக்கும் டிவியை எடுத்துவிடுங்கள்...சினிமாவிற்கு போவதற்கு எவ்வாறு முடியும், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால்...ஒரு பதினைந்து வயது பிள்ளையிடம் பணம் எப்படி வருகிறது பெற்றோர்கள் கொடுக்காமல்...

குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. பெற்றோர் இடையே நடக்கும் கருத்துவேறுபாடு சண்டைகள் ! அவர்கள் இடையே நடக்கும் அடி உதையும் வன்முறைதான். அப்போது பேசப்படும் அவதூறான பேச்சுக்கள் கூட குழந்தைகள் வயதிற்கு ஆபாசம் தான்...!

என்னதான் தீர்வு?!

விருப்பம் போல் விளையாட அனுமதியுங்கள்...படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை முதலில் உணரவேண்டும், அது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே.  ஒழுக்கம், பண்பாடு,விருந்தோம்பல், நன்னடத்தை, பெரியோரை மதித்தல், இப்படி நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது...குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்...! அவர்களுக்காக வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும் உங்கள் குழந்தையை  தொட்டு கொண்டே  வாழுங்கள்...!!
மேலும் பள்ளிகள், அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் குறைகள் சீர் செய்யப்படவேண்டும்...இன்றைய மாணவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர்கள் மட்டும் அல்ல என்பதை அழுத்தமாக கூறி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

கழுகிற்காக
கெளசல்யா

0 கருத்துரைகள்:

Post a Comment