நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Tuesday, April 10, 2012

குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் குழந்தைகள்!

கரூர் பள்ளி மாணவர்கள், கொல்லி மலையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு கல்வி புகட்டுகிறார்கள். 
- ம.சபரி 
படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்
'மவுஸைத் தரையில எல்லாம் வெச்சுத் தேய்க்கக் கூடாது. பேடுல வெச்சுத்தான் நகர்த்தணும்...’, 'கன்ட்ரோல் பட்டன்ல விரலை வெச்சுக்கிட்டே இஜெட்டைத் தட்டுப் பார்க்கலாம்...’ 'அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்...’, 'ஏ ஃபார் ஆப்பிள்’ - இப்படி, மலை கிராமத்துக் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் அல்ல... மாணவர்களே! எங்கே..?
 இன்றைய மாணவர்களுக்குப் படிப்புச் சுமை அதிகம். அவர்கள் தங்களுடையப் பாடங்களைப் படிப்பதே பெரிய விஷயம். ஆனால், கரூரைச் சேர்ந்த குருதேவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்வி புகட்டுகிறார்கள்.
பள்ளி அட்டவணைபோலத் தெளிவாக இருக்கிறது இவர்களுடைய அட்டவணை. காலை 10 மணி முதல் 11 வரை தமிழ், 11 முதல் 12 வரை ஆங்கிலம், 12 முதல் 1 வரை கணிதம், 1 முதல் 2 வரை உணவு இடைவேளை, 2 முதல் 3 வரை கம்ப்யூட்டர், 3 முதல் 4 வரை சமூக அறிவியல், 4 முதல் 5 வரை அறிவியல். கிராமத்து மாணவர்களும் கூச்சல், ரகளை இல்லாமல் கட்டுப்பாடாக அமர்ந்து கவனிக்க, தேர்ந்த ஆசிரியர்களைப்போல அதேசமயம் நட்பு உணர்வுடன் சொல்லித்தருகிறார்கள் குருதேவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
''எங்க ஸ்கூல்ல கம்ப்யூட்டரு இருக்குங்ணா. ஆனா, அந்த ரூமையேத் தொறக்க மாட்டாங்க. நெறைய நாளு ஸ்கூலையே தொறக்க மாட்டாங்க. இந்த அண்ணனுங்க வந்த பின்னாடிதான் கம்ப்யூட்டரையே முதல்முதலா தொட்டுப் பார்த்து கத்துக்கிறோம்'' என்கிறார்கள் கிராமத்துப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன்.
குருதேவர் பள்ளியின் முதல்வர் பாப்பம்மாள், ''எங்கள் பள்ளி சார்பாக ஆண்டுதோறும் ஆடி 18 அன்று இங்கு உள்ள அறப்பள்ளீஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்குவோம். இதனால், இந்தக் கிராம மக்களுடன்  எங்களுக்கு நல்லப் பரிச்சயம் உண்டு. இந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி கிடையாது. மாணவர்களுக்குச் சரியான கல்வி கிடைப்பதும் இல்லை. பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிய இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோதுதான், இந்தத் திட்டம் தோன்றியது.
ஆசிரியர்களைவைத்துப் பாடம் எடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள். மேலும், கிராமத்து மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்த்தாலே நடுங்கி ஓடுகிறார்கள். அதனால், எங்கள் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைக்கொண்டே பாடம் நடத்தத் தீர்மானித்தோம். இந்தத் திட்டம் நன்றாக வேலை செய்தது. கிராமத்துக் குழந்தைகள் பயப்படாமல், நட்பு உணர்வுடன் வருகிறார்கள். தயக்கம் இல்லாமல் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத்  தெளிவுபடுத்திக்கொள்கிறார்கள்.
நகரங்களில் நம் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட வசதிகளுடன் கல்வி கிடைக்கிறதோ அதேபோல, இங்கு உள்ள குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 'காட்சி வழிக் கற்றல்’ முறையில் கம்ப்யூட்டர்களை  சொந்தமாக வாங்கிவைத்துள்ளோம்...'' என்கிறார்.
குருதேவர் பள்ளியின் ஆசிரியர் ஜோதி, ''இந்தத் திட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவருகிறது. மலை கிராம மக்களுக்கு கல்வி, பள்ளிக்கூடம் என்றாலே கசக்கிறது. நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே விரும்புவது இல்லை. குழந்தைகளைத் தங்களோடு காட் டுக்குச் சுள்ளி பொறுக்கவும் தேன் எடுக்கவும் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இதைக் காரணம் காட்டியே இங்குள்ள அரசு பள்ளிகளும் பாதி நாட்கள் பூட்டிக் கிடக்கின்றன.
நாங்கள் முதலில் இங்கு பாடம் எடுக்கவந்தபோது படாதபாடு பட வேண்டி இருந்தது. முதலில் பெற்றோர்களிடம் சொல்லிப் புரியவைத்தோம். பின்பு அவர்களே கொண்டுவந்து விட்டாலும், குழந்தைகள் மிரண்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அனைத்தையும் சமாளித்து இப்போது நகரத்துக் குழந்தைகளே ஆச்சர்யப்படும் வகையில் இந்தக் குழந்தைகள், ஒழுக்கமாகவும் நேரம் தவறாமலும் எங்களிடம் வந்து பாடம் கற்கிறார்கள். சொல்லப்போனால், அந்தக் குழந்தைகள் சனிக்கிழமைகளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
எங்கள் பள்ளி மாணவர்களில் வாரம் 10 பேரை இங்கு அழைத்து வருகிறோம். இங்கு படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. மாணவர்களுக்கு மாணவர்களே பாடம் சொல்லிக்கொடுப்பது மனதளவில் அவர்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் உதவும்’ என்கிறார் உற்சாகமாக.
ஏட்டுக் கல்வி மட்டுமல்ல இயற்கைக் கல்வியும் அவர்களுக்குத் தேவை என்று, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் வாரந்தோறும் இங்கு வந்து இயற்கை விஞ்ஞானம்பற்றி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். காடுகளின் தேவை, மழை நீர் சேகரிப்பு, கானுயிர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் குறித்து ஒவ்வொரு வாரமும் அவர் அளிக்கும் விளக்கங்களை ஆர்வமுடன் கேட்கிறார்கள் குழந்தைகள்.
''உலகத்தின் எந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாடம் எடுத்தாலும் இப்படி ஒரு மன நிறைவு கிடைக்காது. சொல்லப்போனால், மலைவாழ் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்த மக்கள், காட்டை அழிப்பது இல்லை. ரசாயனங்களைக்கொண்டு மண்ணை நாசப்படுத்துவது இல்லை. இயற்கையை தெய்வமாக வணங்குகிறார்கள்; நேசிக்கிறார்கள். நான் இங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தருவது இல்லை; மாறாக அந்தப் பிள்ளைகள்தான் எனக்குப் பாடம் சொல்லித்தருகிறார்கள்!'' என்கிறார் நம்மாழ்வார்.
சத்தியமான வார்த்தைகள்!

- என் விகடன் - கோவை

0 கருத்துரைகள்:

Post a Comment